Monday, April 15, 2013

பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் காலமானார்

பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் தனது 82 ஆவது வயதில் சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் மிகவும் இனிமையான பாடல்களை அவர் பாடியிருக்கின்றார்.

அதேவேளை, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகவும் அவர் திகழ்ந்தார்.


தமிழ் திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவையாக இன்றும் திகழ்கின்றன. ஆந்திராவில் காக்கிநாடாவில் இவர் பிறந்தார். அவரது இயற்பெயர் பிரதிவாதி பயங்கரா ஸ்ரீனிவாஸ் ஆகும்.

1952 ஆம் ஆண்டு மிஸ்டர் சம்பத் என்ற ஹிந்திப் படத்தின் மூலம் தனது திரையிசைப் பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீனிவாஸ்;, 1955 இல் மலையாளத்தில் ஹரிச்சந்திரா என்ற படத்திலும் அடுத்து பாடினார்.

பிரேமபாசம் என்ற படத்தில் அவர் பாடிய தனிப்பாடல்தான் அவரது முதலாவது பிரபலமான பாடலாகக் கூறப்படுகின்றது.
தமிழில் ஜெமினிகணேசனுக்கு அதிகமான பாடல்களைப் பாடிய அவர் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், முத்துராமன், ஏவிஎம் ராஜன் போன்ற நடிகர்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார்.

கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படும் ராஜ்குமாருக்கும் அதிகமான பாடல்களை இவரே பாடியிருக்கிறார்.

பல பக்தி பாடல்களும் இவரது பங்களிப்பில் அடங்குகின்றன. பல இசை குறித்த அமைப்புக்களுக்கும் அவர் தலைமை தாங்கியிருக்கிறார்.

No comments: