Monday, April 8, 2013

வடக்கு கிழக்கை இணைக்கவும்: டெலோ மாநாட்டில் தீர்மானம்

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் இணைப்பாட்சி (சமஸ்டி) அரசியல் முறையின் கீழ் பூரண சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வே முன்வைக்கப்படல் வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8 ஆவது தேசிய மாநாட்டில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை நனவாக்ககூடிய விதத்தில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எம் இனத்தின் மரபுவழி தாயகம் இணைந்த வடக்கு கிழக்காகும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டிலேயே இந்த தீர்மானம் உட்பட மேலும் 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.



1.    தமிழ் இனத்தின் மரவுவழித் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களின் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் நோக்குடன் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படும் சகல சட்டவிரோத குடியேற்றங்களையும் உடனடியாக நிறுத்தி ஏற்கனவே இடம்பெற்ற குடியேற்றங்களையும் கலைக்குமாறு அரசாங்கத்தை கோருகின்றது.

2.    சகல தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குமாறு இலங்கை அரசை கோரும் அதேவேளை ஏற்கனவே புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுவதும், விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் நிறுத்தவேண்டும்.

3.    வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் படைத்தரப்பினரின் தலையீடுகள் சிவில் நிர்வாகத்தில் இனிமேலும் இடம்பெறக்கூடாது.

4.
     வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டுள்ள அரச படைகள் மீள் பெறப்பட வேண்டும் எனவும் முப்படைகளிலும் காவல்துறையிலும் தமிழ் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்தோர் தம் இன விகிதாசாரத்திற்கேற்ப இடம்பெறுவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும் பேணுவதிலும் காவல்துறையினர் மாத்திரமே ஈடுபடுத்தப்படவேண்டும்.

5. 
    முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள மதவாத அமைப்புக்களை சட்டத்தின் முன் நிறுத்திப்படுவதுடன் சட்டரீதியாக தடை செய்யப்படவேண்டும்.

6.
    காணாமல் போனதாக முறையிடப்பட்டிருக்கும் சகல தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கம் உண்மை நிலையை இனியாவது தெளிவுபடுத்தவேண்டும்.

7.
    வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரின் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கு தடையாக உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் உட்பட சகல காரணிகளும் நீக்கப்பட்டு மீள் குடியேறியேற்றம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்படவேண்டும்.

8. 
   இலங்கையில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வந்திருக்கும் தமிழ் இனப்படுகொலைகள் தொடர்பில் சுதந்திரமானதும் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்படல் வேண்டும்.

9.    தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை அணியான தமிழ் தேசியக்கூட்டமைப்பு பலப்படுத்தப்பட்ட ஸ்தாபன ரீதியான கட்டமைப்புடன் தமிழ் தேசிய இனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக அரசியல் குரலாக தொடர்ந்தும் தீவிரமாக செயற் படுவதற்கு தேவைப்படும் சகல நடவடிக்கைகளும் உடனடியாக முன்னெடுக்கப்படல் வேண்டும்.

போன்ற தீர்மானங்களே இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

No comments: